என் மலர்
இந்தியா

அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் நாளை, நாளைமறுதினம் பஞ்சாப் வந்தடைகின்றனர்
- இரண்டு விமானங்கள் மூலம் 119 பேரை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
- நாடு கடத்தப்பட்டவர்கள் நாளை மற்றும் நாளைமறுதினம் பஞ்சாப் மாநிலம் வந்தடைவார்கள்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கிருந்தவர்களை, அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.
அவர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை. இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் மேலும் 119 இந்தியர்களை இரண்டு விமானங்கள் மூலம் இன்று நாடு கடத்தியுள்ளது. இவர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளை) மற்றும பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளைமறுதினம்) அமிர்தசரஸ் வந்தடைவார்கள். இரண்டு விமானங்களும் இரவு 10.05 மணிக்கு அமிர்தரசில் தரையிங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வருபவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா மாநிலத்தையும், 8 பேர் குஜராத் மாநிலத்தையம், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒரு பேர் இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அமெரிக்காவிற்குள் மெக்சிகோ மற்றும் மற்ற எல்லை வழியாக ஊடுருவியவர்கள். ஊடுருவிய நிலையில் பாஸ்போர்ட்களை கிழித்து எறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






