என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பா.ஜ.க.வினர்.
பா.ஜ.க.வினர் 103 பேர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்
- வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர்
- கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கடந்த 13-ந் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 103 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பாஜகவினருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை வேலூர் ஜெயிலில் இருந்து பாஜகவினர் 103 பேரும் வெளியே வந்தனர். ஜெயில் வாசலில் அவர்களுக்கு திருஷ்டி பூசணிக்காய் தேங்காய் சுற்றி உடைத்து பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து பாஜகவினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். இதனால் தொரப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






