என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகையை பறித்த வாலிபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீசார்
    X

    பெண்ணிடம் நகையை பறித்த வாலிபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

    • வளர்மதி அணிந்திருந்த நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
    • விசாரணையில் புரட்சி தமிழன் இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (வயது 55). இவர் தனக்கு சொந்தமான முந்திரி தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் மறைந்து வந்து அவரை தாக்கி வாயை துண்டால் கட்டிப்போட்டார். இதனை சற்றும் எதிர்பாராத வளர்மதி நிலைகுலைந்தார். மேலும் அவரால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டார். பின்னர் அங்கு வந்த சிலர் வளர்மதியை மீட்டனர். இதையடுத்து அவர் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் தனிப்படை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புரட்சி தமிழன் என்பதும் அவர் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரிந்தது.

    மேலும் அவர் மீது அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இவர் வயதான மற்றும் கர்பிணி பெண்களை குறிவைத்து இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

    அப்போது அவர் இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் திருடிய தாலிச் சங்கிலியை விற்பனை செய்ய கிளம்பியபோது கையும், களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்ததோடு நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததோடு நகைகளையும் பறிமுதல் செய்த போலீசாரை பரணம் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×