என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான சரண்
ஆலங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
- ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சரண் வேலை பார்த்து வந்தார்.
- ராட்சத பள்ளங்களில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் வசித்து வருபவர் தேவதாஸ். இவரது மகன் சரண்(வயது 20). இவர் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
தவறி விழுந்து பலி
நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த சரண், மீண்டும் மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஆலங்குளம் ஊர்மடை பகுதியில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் சரண் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சரண் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் பஜார் பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர். ஆலங்குளத்திற்கு மேல்புறம் மலைக்கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைப்பணி முடிவடைந்து விட்ட நிலையில் ஊர்மடை பகுதியில் இருந்து தொட்டி யான்குளம் வரையிலான சாலை அப்படியே கிடக்கிறது.
இந்த சாலையில் ராட்சத பள்ளங்கள் உள்ளது. அதில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. தினமும் அந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சாலையின் இருபுறமும் கடை வைத்திருப்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைகின்றனர் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






