தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா?
வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.
வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மணத்திடல் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50) தொழிலாளி.

இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை கிளம்பியது. சிறு நேரத்தில் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கின.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது . இதில் வீடு கட்டிடம் தரைமட்டமாகியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருவையாறு தீயணைப்பு நிலையம் மற்றும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .

அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் வீட்டில் இருந்த நகை, பணம், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின . ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகியதாக கூறப்படுகிறது .

இது குறித்து போலீசார், மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக வீடு இழந்து பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்திற்கு தாசில்தார் பழனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவுதமன் ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com