என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு கடை தீ விபத்தில் கணவனை இழந்த பெண் அரசு வேலை கேட்டு கலெக்டரிடம் மனு
- தனியார் பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- மனுவை பரிசீலித்து அரசு வேலை ஒதுக்கிட செய்ய வேண்டும் என கூறினார்.
தருமபுரி,
ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி தனியார் பட்டாசு கடையில் நடந்து தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே டி அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வேடப்பன் (வயது 23) என்பவருக்கு கடந்த மாதம் 17-ந் தேதி தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வேடப்பனின் மனைவி சோனியா காந்தி நேற்று தருமபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் சாந்தியிடம் ஒரு மனு அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் பி.ஏ. வரை படித்துள்ளேன் எனக்கு டி அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பனுக்கும் எனக்கும் கடந்த மாதம் 17-ந் தேதி அன்று கைலாபுரம் முருகன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டோம். எனது கணவர் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பட்டாசு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி எனது கணவர் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது பட்டாசு குடோனின் தீ விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவன்றி தவித்து வருகிறேன். எனவே அரசு பணிவுடன் எனது மனுவை பரிசீலித்து எனக்கு அரசு வேலை ஒதுக்கிட செய்து உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






