என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரிவலப்பாதையில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் கிரிவல பாதையில் கம்பிவேலி அமைப்பு
- இது என்னுடைய சொந்த பட்டா நிலம் என கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.
- திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழைமை யான காசிக்கு அடுத்த படியாக காலபைரவருக்கு என்று தனி ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் காலபைரவர் ஜெயந்தி நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மிளகாய் யாகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவதால் இதில் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கோவிலின் வளர்ச்சியும் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்து அறநிலை துறைக்கும் அதிக அளவில் வருவாய் வரும் கோவில்களில் தருமபுரி மாவட்டத்தில் முதன்மையான கோவிலாக காலபைரவர் கோவில் திகழ்ந்து வருகிறது.
மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது முதல் பல்வேறு பெருமைகளை பெற்றுள்ள காலபைரவர் கோவிலுக்கு இன்று திடீரென தனி நபர் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் கோவில் சுற்றுவட்டார கிரிவலப் பாதைகள் மற்றும் தீபம் ஏற்றும் பகுதிகள் அமைந்துள்ளது.
இது என்னுடைய சொந்த பட்டா நிலம் என கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.
மற்ற இடங்களில் கோவிலுக்கு சொந்தமான தீபம் ஏற்றும் இரும்பு தளவாடங்களைக் எடுத்து கொண்டும் பக்தர்கள் வலம் வரும் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு அடைத்துள்ளனர்.
திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கும் பொழுது மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்கள் பெரும்பாலும் அதிக அளவு சுற்றுவட்டார இட வசதிகளுடன் வைத்து தான் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு இடம் இல்லாத வகையில் அமைக்க வாய்ப்புகளே இல்லை.
அவ்வாறு இருக்கும் இடத்தில் மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சொந்தமான முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்யும் போது கோவில் ஆக்கிரமிப்புகள் இதுபோன்ற சிக்கல்கள் முழுமையாக தீரும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சிக்கல் தொடர்பாக உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என்றும் பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்து அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கோவில் இடத்தை ஒட்டி முள் கம்பி வேலிகள் அமைத்தது தவறு. உரிய இடைவெளி விட்டு அமைத்து இருக்க வேண்டும். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.






