என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது
- மானாவரி பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 68.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி,
தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதை யடுத்து தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு இருந்து வந்தது.
தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை முதல் கருமேகம் சூழ்ந்து லேசான சாரல் மழை பொழிய தொடங்கியது. பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தருமபுரி, நல்லம்பள்ளி, கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கனமழை பெய்தது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலக்கடலை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, கொள்ளு, உள்ளிட்ட மானாவரி பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் :-
தருமபுரி 2 மிமீ, மாரண்டஅள்ளி 3 மிமீ, பென்னாகரம் 19 மிமீ, ஒகேனக்கல் 2.4 மிமீ ,அரூர் 23 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டி 4 மிமீ, மொரப்பூர் 11 மிமீ, நல்லம்பள்ளி 3 மிமீ ,என மாவட்டத்தில் மொத்தம் 68.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல பகலில் வெயில் இருந்தது. மாலை மாவட்டத்தில் பல இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு மழை பெய்தது.
கிருஷ்ணகிரி நகரில் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் மழை விடாமல் பெய்தது. இதனால் நகரில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாரூர் 32, தேன்கனிக்கோட்டை 13, ஓசூர் 2.6, கிருஷ்ணகிரி 15.1, நெடுங்கல் 16, பெனுகொண்டாபுரம் 35.2, போச்சம்பள்ளி 25.6, ராயக்கோட்டை 7, சூளகிரி 10, ஊத்தங்கரை 121.4, சின்னாறு அணை 12, கெலவரப்பள்ளி அணை 9, கே.ஆர்.பி. அணை 21.2, பாம்பாறு அணை என அதிகபட்சமாக 126 மில்லி மீட்டர் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.






