search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் போக பாசனத்திற்காக காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு
    X

    முதல் போக பாசனத்திற்காக காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு

    • ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
    • நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை காலிங்கராயன் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு அதாவது 4 மாதத்திற்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் நாளான இன்று 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1009 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கனடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி வீதம் என மொத்தம் அணையில் இருந்து 1,105 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×