search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பளம் வழங்க காலதாமதம் - இல்லம் தேடி கல்வி திட்ட பணியில் இருந்து விலகும் தன்னார்வலர்கள்
    X

    கோப்புபடம்

    சம்பளம் வழங்க காலதாமதம் - இல்லம் தேடி கல்வி திட்ட பணியில் இருந்து விலகும் தன்னார்வலர்கள்

    • வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.
    • தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர்.

    திருப்பூர் :

    ஊரடங்கில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்ப இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 142 மையங்கள் திறக்க அரசு நிர்ணயித்தது. தற்போது வரை 7 ஆயிரத்து 255 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதன்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல் 7மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர், வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதங்களாக இவர்களில் பலர் பணியில் இருந்து விலகிவருகின்றனர். சுமார் 170க்கும் மேற்பட்ட மையங்களில் தன்னார்வலர்கள் இல்லை.

    இது குறித்து தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், இத்திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.அறிவுறுத்தியபடி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்கான சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளமே மே மாதம்தான் கிடைத்தது.இதன்காரணமாகவும் தன்னார்வலர் சிலர் விலகிவிட்டனர். கோடை விடுமுறையில் பயிற்சி நடக்கவில்லை. அதற்கு சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    இந்த மையங்களில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த, ரீடிங் மராத்தான் போட்டி ஜூன் 1-ந்தேதி துவங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்போன் செயலி மூலம் மாணவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளை வாசிக்க வைக்க வேண்டும்.அதிக வார்த்தைகள் வாசித்ததன் அடிப்படையில் மாவட்டம், ஒன்றியம் வாரியாக ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 6 கோடியே 82 லட்சம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்தது.திருப்பூரில்ஊத்துக்குளி வட்டாரம் 413 வட்டாரங்களில் மாநில அளவில் 92வது இடத்தில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 974 செல்போன்களில் இருந்து 1.52 லட்சம் நிமிடங்களில் 76 லட்சம் சொற்கள் சரியாக வாசிக்கப்பட்டுள்ளன.ரீடிங் மராத்தானில் திருப்பூர் பின்தங்க தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர். தன்னார்வலர் சிலரின் தகவல்கள் முறையாக கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க தாமதிக்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×