search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலம்-ரேஷன் கடை வசதியின்றி தவிக்கும் தளிஞ்சி மலை வாழ் கிராம மக்கள்
    X

    பாலம்-ரேஷன் கடை வசதியின்றி தவிக்கும் தளிஞ்சி மலை வாழ் கிராம மக்கள்

    • அதிக விலைக்கு வாங்கி அரிசியும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
    • கூட்டாற்றை கடக்க முடியாமல் குடியிருப்புக்கு திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனசரகத்துக்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இக்குடியிருப்பில் 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இரு மலைகளுக்கு இடையில் உள்ள சமவெளியில் வீடுகள் கட்டி விவசாய சாகுபடியிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதியில் ரேஷன் கடை வசதியில்லாததால் சின்னாறு செக்போஸ்ட் பகுதிக்கு, ரேஷன் பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு நாள் தளிஞ்சி கிராம மக்கள் வர வேண்டியுள்ளது.

    சின்னாறுக்கு வர கரடுமுரடான பாறைகள் நிறைந்த 6 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியிலுள்ள மண் பாதையில் பயணிக்க வேண்டும். வழித்தடத்தில் கூட்டாறு குறுக்கிடுகிறது.ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. மழைக்காலங்களில் ஆற்றை கடக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க பல கி.மீ., தூரம் நடந்து வந்து கூட்டாற்றை கடக்க முடியாமல் குடியிருப்புக்கு திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது.

    இல்லாவிட்டால் கேரளா வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சம்பக்காடு சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து சின்னாறு ரேஷன் கடைக்கு வர வேண்டியது உள்ளது. பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருப்பதால், ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தளிஞ்சி கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அரிசிக்கும், சோலார் பேனல்கள் பழுது காரணமாக, இரவு நேரங்களில் விளக்கு எரிக்க மண்ணெண்ணெயும் அக்கிராம மக்களுக்கு அவசிய தேவையாக உள்ளது.பல்வேறு காரணங்களால், ரேஷன் பொருட்களை பெற முடியாத நிலையில் விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல் இருளிலும் சமவெளிப்பகுதிக்கு சென்று அதிக விலைக்கு வாங்கி அரிசியும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,எங்கள் குடியிருப்பில் நிரந்தர ரேஷன் கடை இல்லாததால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்.உணவு மற்றும் இதர தேவைகளுக்காக, சமவெளிப்பகுதிக்கு வரும் போது வனவிலங்குகள், கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு உட்பட பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம்.அப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும். ரேஷன் பொருட்கள் சீராக வினியோகிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.

    Next Story
    ×