என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் நடந்த சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாமில் அமைச்சர் துரைமுருகன் பேசிய காட்சி.
இடைத்தரகர்களை ஒழிக்க சிறப்பு முகாம்கள் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- 21-ந் தேதி புதிய பஸ் நிலையம் திறப்பு விழா
- 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் வருகிற 21-ந் தேதி புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக பொதுமக்களிடம் தொகுதி வாரியாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
காட்பாடி தொகுதியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நாராயண நாடார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எல்லோருக்கும் குறை உண்டு நீங்கள் தேடிப்போய் முதியோர் பென்ஷன் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்து வருகின்றீர்கள்.
இந்த நிலையை மாற்றுவதற்கு இதுபோல சிறப்பு குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது.
முதியோர் பென்சன், பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவி பெறுவதற்கு இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு வாங்கித்தரும் நிலையை ஒழிக்கவே முதல்வர் பொதுமக்களிடம் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்த அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மனுக்கள் கொடுப்பது பொதுவானது தான். கொடுத்த மனு மீது பயன் கிடைத்தது என்று சொல்ல வேண்டும்.
நம்பிக்கையோடு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு நீர்நிலை புறம்போக்கு வசிப்போருக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்ட பிறகு அவர்களை மாற்ற வேண்டும்.
மாவட்டத்தில் 100 சதவீதம் பெறப்படும் மனுக்களில் 80 சதவீத மனுக்களுக்கு கலெக்டர் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம். பி. எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, துணைமேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.