என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் லாங்கு பஜாரில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- லாங்கு பஜார், மண்டிவீதியில் தள்ளுவண்டி கடைகள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட் ஒட்டியுள்ள லாங்குபஜாரில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகிவரும் தள்ளு வண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் லூர்து மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் லாங்கு பஜார், மண்டி தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சாலையோர ஆக்கிரப்புகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
லாங்குபஜாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி சென்றனர். 25-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்ட வியாபாரிகள் பலர் தங்களது வண்டிகளை அங்கிருந்து தள்ளிக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தனர்.
மேலும் லாங்குபஜார் பகுதியில் நடைமேடைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த வியாபாரிகள் உடனடியாக பொருட்களை அப்புறப்ப டுத்தினர். இதனால் மண்டி தெரு, லாங்கு பஜார் பகுதி வழக்கத்தைவிட விரிவாக காணப்பட்டது. பொது மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் செல்ல முடிந்தது.
இதேபோன்று தினந்தோறும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






