என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்தல் லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்து
- டிரைவர்கள் படுகாயம்
- சமூக விரோத கும்பல் கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு
குடியாத்தம்:
குடியாத்தம் கந்தனேரி அடுத்த தாங்கல் கிராமத்தில் இருந்து இன்று காலை ெரயில்வே தண்டவாளம் ஜல்லி நிரப்பும் பணிக்காக டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்றது.
குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த ஒரு லாரி டிப்பர் லாரி மீது மோதி திரும்பி நின்றது இதில் 2 லாரிகளின் டிரைவர்களும் பலத்த காயமடைந்தனர்.
அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் வருவதற்குள் மோதிய லாரியில் இருந்த டிரைவர் காயங்களுடன் தப்பி ஓடிட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த லாரியை சோதனை போது அதில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தன. ரேசன் அரிசியை வெளியூருக்கு கடத்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதுதெரியவந்தது. இதில் காயம் அடைந்த டிப்பர் லாரி டிரைவர் மரியதாஸ் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ரேசன் அரிசி கடத்தல் லாரி விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கடராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். லாரியில் இருந்த அரிசி முட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வேலூர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த லாரியில் இருந்த சுமார் 4 டன் எடையுள்ள ரேசன் அரிசியை விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்து மீட்டு குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்
விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் குறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கடத்தல்
குடியாத்தம் பகுதி தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள பகுதியாகும் குடியாத்தம் வழியாக சமூக விரோத கும்பல் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரேசன் அரிசிகளை சேகரித்து மூட்டைகளாக மாற்றி வெளியூர்களுக்கு கடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறைவரும், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தும் ரேசன் அரிசி கடத்தல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதனை தொடர்ந்து எல்லைபுற பகுதியான குடியாத்தம் அருகே உள்ள சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த சில மாதங்களில் மட்டும் குடியாத்தம் பகுதியில் பல டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ரேசன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சமூக விரோத கும்பல் கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.






