என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு
- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுக்கொண்டாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (30). தம்பதியினருக்கு பத்மப்பிரியன் (16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பத்மப்பிரியன் கீழ்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளியில் நேற்று பிளஸ்-1 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
சிறப்பு வகுப்பு முடிந்ததும் பத்மபிரியன் தனது நண்பர்களுடன், கீழ்அரசம்பட்டில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களோடு குளித்த போது தண்ணீரில் மூழ்கிய பத்மபிரியன், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் மூழ்கிய மாணவனை தேடினர்.
நீண்ட நேர தேடலுக்கு பின்பு சேற்றில் சிக்கியிருந்த பத்மப்பிரியனை பிணமாக அந்த பகுதி மக்கள் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






