என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா
- கலெக்டர் பரிசுகளை வழங்கி வழியனுப்பினார்
- தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது
வேலூர்:
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக சுற்றுலா தினம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கோட்டையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வழியனுப்பினார். தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் விடுதி மாணவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாக 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்கள் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், வேலூர் கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக சென்றனர்.
சுற்றுலாவின் முக்கிய நோக்கமே பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு. காலை மாலை ஆகிய நேரங்களில் தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர் (பொ) இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






