search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் என்ஜினீயரிடம் ரூ.6.51 லட்சம் மோசடி
    X

    பெண் என்ஜினீயரிடம் ரூ.6.51 லட்சம் மோசடி

    • ஆன்லைன் முதலீட்டில் அதிக பணம் தருவதாக வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி ஏமாற்றம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த 30 வயது பொறியியல் பட்டதாரி பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த 12ந் தேதி இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் இந்த சேவையை பெற வேண்டும் என்றால் டெலிகிராமில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து டெலிகிராமில் அந்தப் பெண் அவர்களை தொடர்பு கொண்டார்.

    அப்போது மர்ம நபர்கள், உங்கள் பெயரில் வர்த்தக கணக்கு ஒன்று தொடங்கப்படும். நீங்கள் செலுத்தும் தொகைக்கு கூடுதலாக பணம் அந்த கணக்கில் வரவு வைக்கப்படும் அதை நீங்கள் உங்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றனர்.

    இதை நம்பிய அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய இணையதள லிங்கில் சென்று தனது பெயரில் கணக்கு ஒன்று உருவாக்கி ரூ.2 ஆயிரம் செலுத்தினார். பின்னர் சிறிது நேரத்திலேயே ரூ.2,800 அவருக்கு வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை அவர் தனது வங்கி கணக்கு மாற்றிக் கொண்டார்.

    இந்த வர்த்தகம் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். அதை தொடர்ந்து அவர் 16-ந் தேதி வரை பல தவணைகளில் ரூ.3 லட்சம் பணம் செலுத்தினார். இதையடுத்து அவர் கூடுதல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த மர்ம நபர்களை அவர் தொடர்பு கொண்ட போது உங்களுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே நீங்க செலுத்திய தொகை மற்றும் கூடுதல் தொகை உங்களுக்கு வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பிய அந்தப் பெண் தனது வங்கியில் கடன் வாங்கி ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் வரை அந்த லிங்கில் சென்று பணத்தை செலுத்தியுள்ளார்.

    பின்னர் பணத்தை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. அந்த நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அவருக்குதெரியவந்தது. இது குறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் கூறுகையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் அதிக பணம் தருவதாக கூறி மர்ம நபர்கள் மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் தங்களது வங்கி விவரங்களை கொடுக்க வேண்டாம். மேலும் அதிகபணத்திற்கு ஆசைப்பட்டு பணமும் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர்.

    Next Story
    ×