என் மலர்
உள்ளூர் செய்திகள்

குருமலை கிராமத்தில் முதல்முறையாக இலவச ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்தல் முகாம்
- மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர்
- ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து உதவி கலெக்டருக்கு பரிந்துரை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல்மலை, நச்சிமேடு மற்றும் பள்ளக்கொல்லை ஆகிய 4 மலை கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பொது மக்களுக்கு பெரும்பாலும் ஜாதி சான்றிதழ் இல்லை.
மலைவாழ் மக்களுக்கு எளிதில் ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வகையில், முதல்முறையாக இலவசமாக ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முகாம் நேற்று நடந்தது. குருமலை மலை அடிவாரத்தில் நடந்த இந்த முகாம்க்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தாசில்தார் வேண்டா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர்.
படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் ஜாதி சான்றிதழை கேட்டு இணையத்தில் எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் தவித்தனர்.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தனது சொந்த செலவில், 2 கம்ப்யூட்டர்களை வரவழைத்து அந்த இடத்திலேயே ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து சப்-கலெக்டர்க்கு பரிந்துரை செய்தனர்.






