என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்களிடம் அத்துமீறிய போதை வாலிபர்கள் விரட்டியடிப்பு
- கேலி கிண்டல் செய்ததாக புகார்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபா ளையத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரைமீது தினமும் மாலை நேரத்தில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை போதை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் போதை வாலிபர்கள் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று வேப்பங்குப்பம் ஏரிக்கரை மீது அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வாலிபர்கள், சாலையில் நின்றுக்கொண்டு கேலி கிண்டல் செய்ததோடு, பெண்களிடம் அத்து மீறியதாக தெரிகிறது.
இது குறித்து பொதுமக்கள் தகவலின் பேரில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி, போலீசில் புகார் செய்தார்.
விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் கேலி கிண்டல் செய்து கொண்டிருந்த வாலிபர்கள் மற்றும் மது அருந்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். அப்போது போதை வாலிபர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர்.
ஏரியின் கரைமீது மது அருந்தவோ, பொழுதை கழிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது போதை ஆசாமிகள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. எனவே தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






