search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியில் தொய்வு
    X

    அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியில் தொய்வு

    • மண்சாலையும் மழை நீரில் அடித்து சென்றது
    • வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 14 வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து இறந்தனர்.

    அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் அல்லேரியில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.

    அப்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

    இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்து. அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அளவிடும் பணிகள் முடிந்து வனத்துறைக்கு இடத்தினை வழங்கினர். இதன்பின் வனத்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் கடந்த மாதம் நடந்தே மலைப்பகுதிக்கு சென்று சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.

    கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது மண் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

    பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து, காயங்களுடன் செல்வது தொடர்கதையாக நடக்கிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையையாவது சீரமைத்து தர வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×