என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்டையில் மூழ்கிய முதியவர் உடல் மீட்பு
- 18 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து இன்று காலை உடலை மீட்டனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பென்னத்தூர் அடுத்த கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 70), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா என்ற மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் காலை அபிமன்னன் அந்த கிராமத்தில், செயல்படாமல் இருந்த கல்குவாரி குட்டைக்கு மனைவி புஷ்பாவுடன் சென்றார்.
புஷ்பா துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அபிமன்னன் குளிப்பதற்காக கல்குவாரியில் இறங்கிய போது ஆழமான பகுதியில் விழுந்தார். நீச்சல் அடிக்க முடியாத சூழலில் அவர் தத்தளித்தபடி தண்ணீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் குட்டையில் இறங்கி தேடி உள்ளனர்.
நீண்ட நேர தேடலுக்கு பின்பும் அவர் கிடைக்கவில்லை. இதனால் கிராம மக்கள் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, அபிமன்னனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணிவரை தேடியும் உடல் கிடைக்கவில்லை. இதனால் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் 18 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து இன்று காலை அபிமன்னன் உடலை மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் விரைந்து வந்து அபிமன்னன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






