என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த மனைவியை தடுத்து ரகளை செய்த ராணுவ வீரர்
- போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
- போதையில் கத்தியால் குத்த வருவதாக புகார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள சின்னப் பாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுபாஷினி. தம்பதிக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக புகார் மனு கொடுக்க இன்று காலை சுபாஷினி வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மனு கொடுப்பதற்காக காயிதேமில்லத் அரங்கு அருகே உள்ள கவுண்டரில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கணவர் வேல்முருகன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
மனு கொடுக்கும் இடத்தில் சுபாஷினி நிற்பதை கண்ட அவர் கடும் ஆத்திரமடைந்தார். சுபாஷினியை கையால் பிடித்து இழுத்து மனு கொடுக்க விடாமல் தடுத்தார்.
அப்போது சுபாஷினி கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த போலீசார் வேல்முருகனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் எனது மனைவியை நான் அழைத்துச் செல்கிறேன் உங்களுக்கு என்ன என கேள்வி எழுப்பினார். சத்தம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு வாங்கிக்கொண்டிருந்த அதிகாரிகளும் வெளியே வந்தனர்.
தொடர்ந்து வேல்முருகன் அவரது மனைவியை இழுத்து செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேல்முருகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சுபாஷினி கூறுகையில்:-
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான வேல்முருகனுக்கும் எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. அவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறார். போதையில் கத்தியால் குத்த வருகிறார். மேலும் வீட்டில் அமர்ந்து நண்பர்களுடன் மது குடிக்கிறார்.இதனால் அவரிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






