என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் ரூ.3 கோடி செலவில் கட்டப்படும் வெள்ள தடுப்புச் சுவர் பணிகள் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை
- அதிகாரி ஆய்வு
- காமராஜர் பாலத்தை பலப்படுத்தும் வகையில் அலைக்கற்கள் பதிப்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் சுமார் 1500-க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன அந்த வீடுகளை சில மாதங்களுக்கு முன்பு அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற் பொறியாளர் ஆர்.ரமேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து திட்ட பணிகள் எவ்வாறு செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பி. கோபி, உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 2 பக்க கரைகளில் தலா இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது இந்த வெள்ள தடுப்புச் சுவர் அடுத்த ஆண்டு தொடங்கும் பருவமழைக்கும் முன்னதாகவே திட்டப் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாக்கம் ஏரியிலிருந்து வரும் கால்வாய் தண்ணீர் கவுண்டன்யா மகாநதி ஆற்றிற்குள் வருவதற்கும், நெல்லூர் பேட்டை ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் கவுண்டன்யா மகாநதி ஆற்றிற்கு வருவதற்காகவும் இந்த வெள்ள தடுப்புச் சுவரின் 2 இடங்களில் உள்வாங்கிகள் அமைக்கப்பட்டு அந்த உள்வாங்கிகளுக்கு கதவுகள் பொருத்தப்படும்,
காமராஜர் பாலத்தை பலப்படுத்தும் வகையில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் காமராஜர் பாலத்தின் இரண்டு பக்க கரை பகுதியில் வெள்ள தடுப்பு அலைக்கற்கள் பதிக்கப்படும் என தெரிவித்தார்.






