என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் மேயர் சுஜாதா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அருகில் நகர் நல அலுவலர். கணேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
அனுமதி பெறாமல் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானம் விற்பனை செய்தால் நடவடிக்கை
- வேலூர் மேயர் தகவல்
- கால்வாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதாக புகார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். நகர் நல அலுவலர் கணேஷ் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர்கள் சிவகுமார், பாலமுருகன், முருகன், லூர்துசாமி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சியில் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி மேயர் சுஜாதா கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் அதிகமாக வருகிறது. பெறப்படும் குப்பைகள் உரமாக்கபட்ட பின்னர் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது.
மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது.
இது தொடர்பாக புகார்கள் வருகிறது. மாடுகள் பிடிக்கப்பட்டாலும் மீண்டும் சாலையில் தான் அவிழ்த்து விடப்படுகிறது. எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி வேலூர் போக்குவரத்து போலீசார், மிருகவதை தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு காதுகளில் உரிமையாளர்களின் பெயர் விவரம் உள்ளிட்ட டேக் போடப்படம். தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்றிகள் தொல்லையும் அதிகமாக உள்ளது அதை கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் இருந்து பன்றிகள் பிடிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்.
பிடிக்கப்படும் பன்றிகளை அவர்கள் மதுரைக்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.
பன்றிகள் உரிமையாளருக்கு திருப்பி கொடுக்கப்பட மாட்டாது. நகரில் உள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவு மிதக்கிறது உரிமம் இல்லாத குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மீறி விற்பனை செய்தால் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அடுத்த வாரம் திறக்கப்படும் கருத்தடை மையத்தில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






