என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் ெரயிலில் பெண்ணுக்கு பிரசவம்
- திருப்பதி சென்று திரும்பிய போது பெண் குழந்தை பிறந்தது
- தாய், குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
வேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






