என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் ரெயிலில் தப்பி ஓட்டம்
- காவலாளிகளை தாக்கி விட்டு துணிகரம்
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையோரம் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது.
இதன் கண்காணிப்பாளராக விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு இல்லத்தில் திருட்டு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சென்னையை சேர்ந்த சிறுவன் கடந்த 25-ந் தேதி தன்னை வேறு இல்லத்துக்கு மாற்றக்கூடாது என்று கூறி கட்டிடத்தின் மேலே ஏறி ரகளையில் ஈடுபட்டான்.
மேலும் அங்குள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., மின்விளக்குகளை கம்பால் அடித்து உடைத்தான்.
இளஞ்சிறார் நீதித்துறை நீதிக்குழும நீதிபதி பத்மகுமாரி சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து அவன் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். இதுதொடர்பாக பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் மற்றும் சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வழக்கம்போல் இல்ல பாதுகாப்பு பணியில் குமரவேலு, பிரபு உள்பட 3 காவலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட
சென்னையை சேர்ந்த 2 பேர், திருவள்ளூரை சேர்ந்த 2 பேர், சேலம் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 6 பேர் அறையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் திடீரென கை மற்றும் கட்டையால் சரமாரியாக காவலாளி குமரவேலை தாக்கினர்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற 2 காவலாளிகளும் அங்கு விரைந்து சென்றனர். அவர்களையும் 6 பேரும் சரமாரியாக தாக்கி விட்டு பின்னர் பின்பக்க சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பியோடினார்.
இதில், காயமடைந்த காவலாளிகள் இதுகுறித்து இல்ல கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு செல்போனில் புகார் கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர்.
பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வேலூர் மாநகர பகுதி முழுவதும் நேற்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.ஆனாலும் சிறுவர்கள் பிடிபடவில்லை. தப்பி ஓடியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
6 பேரில் 4 பேர் ஆட்டோவில் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் ரெயில் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எந்த ரெயிலில் ஏறி தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து கண்டறிய காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் 2 சிறுவர்கள் பஸ்சில் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தப்பி ஓடிய சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அரசு பாதுகாப்பு இல்லத்தில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






