என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லேரி மலையில் நிபுணர் குழுவினர் 2-வது நாளாக நிலம் அளவீடு
    X

    அல்லேரி மலைப்பகுதியில் நிலம் அளவிடும் பணியில் ஈடுப்பட்டுள்ள குழுவினரை படத்தில் காணலாம்.

    அல்லேரி மலையில் நிபுணர் குழுவினர் 2-வது நாளாக நிலம் அளவீடு

    • 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது
    • நெட்வொர்க் வசதி இல்லாததால் பணி தடைப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைப்பகுதியில் நிபுணர் குழுவினர் இன்று 2-வது நாளாக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்தி மரத்துக் கொல்லை பகுதியை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.

    இவர் கடந்த 27-ந்தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்கு கையால் சுமந்து நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைக்க அளவீடு பணி நடந்து. மேலும் அனுமதி கேட்டு மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு இடையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு, வனத்துறைக்கு மாற்று இடம் வழங்க அல்லேரி மலை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை.

    எனவே வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்ப பிரிவு குழுவின் உதவியோடு ஜி.பி.எஸ். கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதனை அடுத்து வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவினர், ஜி.பி.எஸ். கருவியுடன் அல்லேரி மலையில் அளவீடு பணியில் ஈடுபட்டனர்.

    மலைப்பகுதியில் நெட்வொர்க் வசதி இல்லாததால், அளவீடு செய்யும் பணி செய்ய முடியவில்லை. இதனால் அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் நிபுணர் குழுவினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஓரிரு நாட்களில் ஜி.பி.எஸ்.கருவி மூலம் நிலம் அளவீடு செய்துவிடலாம் என நிபுணர் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×