என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றிய 16 மாடுகள் பிடிபட்டன
- உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிகின்றன.
இதனால் அந்த வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித் தள்ளுவதால் காயமடைந்து வருகின்றனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வந்தனர்.
பொதுமக்களின் புகாரை அடுத்து மேயர் சுஜாதா உத்தரவின் பெயரில் இன்று மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ 1000 அபராதமும், 3 மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், மாநகர சாலைகளில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகள் கோ சாலையில் ஒப்படை க்கப்படும். அபராத தொகை கட்டியவுடன் மாடுகள் விடுவிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் யாரும் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது.
இனி சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.






