என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் வாகன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி
- பிரச்சாரத்தை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- அடுத்த மாதம் வரை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம், மற்றும் தெருமுனை கலைநிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கட்டுபாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 12.10.2023 வரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணியினை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இக்கணக்கெடுப்பு பணியினை பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மூன்று சக்கர வண்டி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாநில உரிமைகள் திட்ட மேலாளர் பிலிப்ஸ், திட்ட அலுவலர் அனிதா, மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






