search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சுறுத்தலாக உள்ள மின்கம்பிகளை மாற்ற வலியுறுத்தல்
    X

    அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்கம்பிகள்.

    அச்சுறுத்தலாக உள்ள மின்கம்பிகளை மாற்ற வலியுறுத்தல்

    • இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பேராவூரணி :

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன.

    மேலும், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மின்மாற்றியும் உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றியாலும், அதன் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜமாணிக்கம், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் கூறுகையில், "மக்களைத் தேடி முதல்வர் முகாமில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் வந்த பதில் கடிதத்தில், 100 தினங்களுக்குள் அகற்றப்படும் என கூறப்பட்டது.

    ஆனால் தற்போது கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்கம்பி அகற்றப்படாமல், மின்மாற்றி இடமாற்றம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அருகில் உள்ள சித்தாதிக்காடு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவிட்டும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, இம்மாத இறுதியில் மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமத்தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×