என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில், கார் மோதி 2 பேர் பலி
- முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
- விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முரளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கார்வேபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35). இவரும் ஹரீஷ் (32) என்பவரும் காரில், நேற்று மாலை தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி காரில் வந்த கொண்டிருந்தனர்.
அந்த கார்தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். ஹரீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே ஹரீசும் உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி அணை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து பலியான முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






