என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையங்களில்  சிவில் சப்ளை சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    நெல் கொள்முதல் நிலையங்களில் சிவில் சப்ளை சி.ஐ.டி. அதிகாரிகள் 'திடீர்' ஆய்வு

    • நெல் கொள்முதல் நிலையங்களில் சிவில் சப்ளை சி.ஐ.டி. அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு செய்தனர்
    • ஆவணங்கள் இல்லாததால் 29 டன் நெல் பறிமுதல்

    திருச்சி:

    தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரவை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நெல் நேரடி கொள்முதல் செய்வதில் வெளிமாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்களின் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் எடுத்து வருவதாகவும், அரிசி ஆலைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்து வருகிறது.

    அதைத்தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின்(சிவில் சப்ளை சி.ஐ.டி.) டி.ஜி.பி. ஆகாஷ் குமார் மேற்பார்வையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் ஆவணங்களுடன் எடுத்து வரப்படுகிறதா? என மாவட்ட எல்லைகள் மற்றும் சோதனை சாவடிகளில் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 29.5 டன் நெல் மூட்டைகள் 3 லாரிகளுடன் பிடிபட்டது. பின்னர் அதனை நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் வசம் ஒப்படைத்தனர். மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை பிடித்து அந்த லாரி ஓட்டுனர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமல்லாமல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக டி.ஜி.பி. ஆகாஷ் குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட உட்பட்ட மருங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், சரவணன் என்பவருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையையும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் முத்தையா மற்றும் தஞ்சாவூர் கொள்முதல் அதிகாரி எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×