search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உறவினரின் வண்டியை ஓட்டி சென்றபோது விபரீதம்: திருடன் என நினைத்து வாலிபரை அடித்து உதைத்த கிராம மக்கள்
    X

    உறவினரின் வண்டியை ஓட்டி சென்றபோது விபரீதம்: திருடன் என நினைத்து வாலிபரை அடித்து உதைத்த கிராம மக்கள்

    • வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி-மேகலா தம்பதியின் மகன் அசோக்குமார் (வயது25).

    இவர் அடிக்கடி குடித்து விட்டு எந்தவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அசோக்குமார் சம்பவத்தன்று பி.அய்யம்பட்டியில் உள்ள அவரது உறவினர் கலா வீட்டிற்கு சென்றார். அங்கு கலாவின் மாமனார் குழந்தைவேல் என்பவருடன் சேர்ந்து ஊருக்கு வெளியே சென்று ஒன்றாக மதுக்குடித்துள்ளனர்.

    அப்போது குழந்தைவேலின் வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, வண்டியை எடுத்து கொண்டு பங்கில் பெட்ரோல் போட்டு வருமாறு அவர் அசோக்குமாரிடம் கூறினார். உடனே தருமபுரி-கடத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டு அசோக்குமார் மீண்டும் குழந்தைவேல் இருக்கும் இடத்திற்கு திரும்பி சென்றார்.

    அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் வண்டியை சரிவர ஓட்ட முடியாமல் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் பார்த்தபோது அசோக்குமார் எடுத்து சென்ற வண்டி குழந்தைவேலுடையது என்றும், அந்த வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து குழந்தைவேலுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது கிராம மக்கள் திருடன் என நினைத்து அடித்து உதைத்த வாலிபர் தன்னுடைய உறவினர் என்றும், தான்தன் வண்டியை பெட்ரோல் போட கொடுத்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே வெளியே சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கலாவிடம் விசாரித்தபோது அசோக்குமார் அப்போது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார். ஆனால், தனது மகன் மீண்டும் வீடுதிரும்பி வராததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் மேகலா கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    திருடன் என தவறாக நினைத்து கிராம மக்கள் வாலிபரை அடித்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×