search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க  ஆண்டு குறியீடாக ரூ.220 கோடி நிர்ணயம்   -கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
    X

    மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ஆண்டு குறியீடாக ரூ.220 கோடி நிர்ணயம் -கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

    • அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    பயிர் கடனாக தனிநபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 8,987 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.75 கோடியே 53 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ஆண்டு குறியீடாக ரூ.220 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, பயிர்கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    எனவே, விவசாயிகள் நில உடைமை சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகிய ஆவணங்களுடன், தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து, உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயன் பெறலாம்.

    மேலும், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக்கடன், மாற்றுத்திறனாளிகளக்கு வட்டியில்லா கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக் கடன்கள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி கூட்டுறவுத்துறையின் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×