என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. பொதுமக்கள் அதில் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.
ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
- செங்கத்தில் 62.5 மி.மீ. பதிவு
- விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஜவ்வாதுமலை மற்றும் மலையடிவார கிராமங்களில் மழையின் தாக்கம் கூடுதலாக இருந்தது.
ஜமுனாமரத்தூர் (ஜவ்வாது மலை) பகுதியில் அதிகபட்சமாக 65 மி.மீ., மழை பெய்துள்ளது. இதன் எதிரொலியாக, வறண்டு கிடந்த சுற்றுலா தலமான பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது.
இதனைக் காண, சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். பீமன் நீர்வீழ்ச்சியை போன்று, மலை கிராமங்களில் உள்ள ஓடைகளிலும் தண்ணீரை காணமுடிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 27.44 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணி பகுதியில் 62, செய்யாறு 26, செங்கம் 62.5, வந்தவாசி மற்றும் தண்டராம்பட்டு பகுதியில்2, போளூர் 27.2., திருவண்ணாமலை 18.3, கலசபாக்கம் 5, சேத்துப்பட்டு 1.6, கீழ்பென்னாத்தூர் 37.6, வெம்பாக்கம் 20மி.மீ., என மழை பெய்துள்ளது.