என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் அடுத்த பருவத மலையை நவீன கேமரா மூலம் பிடிக்கப்பட்ட படத்தினை காணலாம்.
பருவதமலை உச்சிக்கு சாலை அமைக்க நவீன கேமரா மூலம் ஆய்வு
- ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
- வாகனங்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவதமலை உள்ளது.
இதன் உச்சியின் மீது மல்லிகாஜூவனேஸ்வரர் உடனுரை பிரம்பராம்பிக்கை தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பருவதமலை மீது ஏறி செல்லும் வழியில் ஏனி படி, கடப்பாறை நெட், தண்டவாளம் பாதை, தொங்கு பாலம் போன்றவற்றை பக்தர்கள் கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மலைக் கோவில்களில் 5 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதியில் பருவதமலையும், போளூர் தொகுதியில் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில் என இரண்டு கோவில்களுக்கு மலை உச்சிக்கு செல்ல பாதை அமைக்கும் பணி உட்பட 5 கோவில்களுக்கும் சேர்த்து ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்படுவதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயற்பொறியாளர் அன்பரசன் உட்பட பலர் பருவத மலையை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தனர்.
அப்போது உடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் பருவதமலைக்குச் சென்று பச்சையம்மன் கோவிலில் இருந்து வீரபத்திரன் கோவில் மற்றும் மலையேறும் பாதையில் பாதி தூரம் வரை சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று நவீன கேமராக்களை கொண்டு 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவத மலையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மலைக்கு மேலே செல்வதற்கு மாற்று பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.






