search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பென்னாத்தூர் அருகே 10 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

    • முகமூடி அணிந்து வந்த 3 பேர் கும்பலுக்கு வலை வீச்சு
    • வீட்டின் கதவை தட்டி தம்பதியை தாக்கி துணிகரம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 67). இவர் வீட்டின் முன்பு பங்கடை மற்றும் மினி மாவு மில் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிருந்தா (55). இவர்களுக்கு சூர்யா (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் கணவன் -மனைவி வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    வழக்கம் போல் கடையின் ஷட்டரை மூடிவிட்டு நேற்று இரவு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் தூங்கச் சென்றனர்.

    நள்ளிரவில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் வெங்கடாஜலபதியின் கடையின் ஷட்டரை திறக்க முயன்றுள்ளனர். பின்னர் வீட்டின் கதவையும் தட்டினர்.

    சத்தம் கேட்டு எழுந்து வந்த கணவன் மனைவி இருவரும் கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம கும்பல் அவர்களை வீட்டுக்குள் தள்ளி சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் பிருந்தா அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நாணயம், கம்மல், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் 2 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டார். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் 10 1/2 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெங்கடாஜலபதி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இன்று காலை டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×