search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
    X

    பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நடந்தது

    திருவண்ணாமலை:

    பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

    தமிழக முதல்- அமைச்சரால் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2 லட்சத்து 38 ஆயிரம் மரக்கன்றுகளும், வேளாண் துறை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகளும் என ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடைபெற்றது.

    இந்த பணி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் 345 கிராமங்களிலும் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதன் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை ஒன்றியம் தென்மாத்தூர் கிராம ஊராட்சியில் குளத்தின் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

    துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு வகையில் தமிழகத்தில் முன்னிலையில் திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    நிலத்தடி நீர் மேம்பாடு, பண்ணை குட்டை அமைத்தல் ஆகியவற்றில் முதல் மாவட்டமாக திகழ்ந்ததால் கலெக்டருக்கு முதல்- அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாக பல்வேறு முயற்சி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த பணியும் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×