என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் அடிதடி; பட்டதாரி ஆசிரியர் கைது
- வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தியதால் தகராறு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே உள்ள ஆதமங்கலம் புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இதே பள்ளியில் கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (38) என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் என்பவர் கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் விடுமுறையில் சென்றிருந்த காரணத்தால் அந்த பொறுப்பை உதவித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 8-ந் தேதி உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பள்ளி வகுப்பறையில் ஆய்வு மேற்கெண்ட போது பச்சையப்பன் வகுப்பு நேரத்தில் செல்போனை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இது பற்றி அப்போது அவரிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டு மறுநாள் காலையில் நடைபெற்ற இறை வணக்கம் கூட்டத்தின் போது உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் யாரும் வகுப்பு நேரங்களில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று விடுமுறை முடித்துவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சீனிவாசனிடம் பச்சையப்பன் தன்னை மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்படுத்துவதை குறிப்பிட்டு பேசி அசிங்கப்படுத்தி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கிருந்த ஆறுமுகம், பச்சையப்பன் இருவருக்கும் தலைமை ஆசிரியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் தலைமையாசிரியர் வகுப்பறையில் இருந்த நாற்காலியை எடுத்து ஆறுமுகத்தின் மீது தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஆறுமுகத்துக்கு காயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
இது சம்பந்தமாக ஆறுமுகம் கடலாடி போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






