என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் ஏரிக்கரையில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்
ஏரிக்கரையில் விவசாயிகள் பள்ளம் தோண்டியதால் பரபரப்பு
- மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏரி மதகுகள் மூடப்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த ஏரிக்கு கீழ் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன் படுத்தி வருகின்றனர்.
மேலும் ஏரிக்கு வரும் கால்வாய் மூலம் கழிவு நீர் கலப்பதால், தண்ணீர் முழுவதும் கழிவு நீராக உள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது.
எனவே கண்ணமங்கலம் ஏரி மதகுகளை சீரமைக்க பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று கண்ணமங்கலம் ஏரிக்கரை மீது பள்ளம் தோண்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் பகுதி வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் விரைந்து சென்று பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் ஏரி மதகுகளை சீரமைக்க உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் கணணமங்கலம் ஏரிப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






