என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பம்
    X

    திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பம்

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • வருகிற 28-ந்தேதி கடைசி நாள்

    திருவண்ணாமலை:

    2022-23-ம் நிதி ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். மேலும் குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

    இவ்விருதிற்கு awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பதாரரின் கையேட்டுடன் பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ 2, சுயசரிதை, சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படத்துடன், சேவையை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று, கையேடு இரண்டு நகல்கள் (தமிழில்) போன்றவை இணைக்க வேண்டும். திருநங்கையை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

    தேர்தெடுக்கப்படும் ஒரு திருநங்கைக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்க வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×