search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்-சாலை மறியல்
    X

    ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் நள்ளிரவில் ஒரு தரப்பினர் சாலை மறியல் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்-சாலை மறியல்

    • 6 பேர் கைது, 30 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை,

    கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவில் காளை மாடு விடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலின் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின் போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மீண்டும் இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ஒரு தரப்பினருக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

    சம்பவத்தால் ஆதமங்கலம் புதூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் தகராருக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திடீரென நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து கடலாடி போலீசார் மற்றும் திருவண்ணாமலை ஏடிஎஸ்பி ஸ்டீபன், போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதில் தற்போது இரு தரப்பினர்களிடமிருந்து சசிகுமார், சிதம்பரம், கவியரசு, மற்றும் தினேஷ், அருண், அஜித்குமார் ஆகிய 6 பேரை கடலாடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்படி ஆதமங்கலம் புதூர் பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    Next Story
    ×