என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு கல்லூரியில் மாணவா்சோ்க்கை இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது
    X

    கோப்பு படம்.

    உடுமலை அரசு கல்லூரியில் மாணவா்சோ்க்கை இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது

    • காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு சான்றிதழுக்கும் மூன்று நகல்கள் மற்றும் உரிய கட்டணம் கொண்டுவரவேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கையின் இறுதிக் கட்டக் கலந்தாய்வுநாளை 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    முதலில் நடைபெற்ற இரண்டு கலந்தாய்வுகளில் 735 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 129 காலியிடங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதலாகப் பெறப்பட்ட 50 இடங்கள் என மொத்தம் 179 காலியிடங்களுக்கு இந்த இறுதிக்கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    மொத்தக் காலியிடங்களில் 75 இடங்கள் இளநிலை கலைப் பிரிவுகளிலும் (தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல்), 41 இடங்கள் வணிகவியல் பாடப் பிரிவுகளிலும் (வணிகவியல், வணிகவியல் -கணினி பயன்பாடு, மின் வணிகவியல், மற்றும் வணிக நிா்வாகவியல்), 63 இடங்கள் அறிவியல் பாடப் பிரிவுகளிலும் (கணினி அறிவியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், மற்றும் புள்ளியியல்) காலியாக உள்ளன.

    தரவரிசை மற்றும் இனச் சுழற்சி அடிப்படையிலேயே விண்ணப்பதாரா்கள் அழைக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறும். இனவாரியான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பதாரா்கள் இல்லாதபொழுது, தமிழக அரசு வழங்கியுள்ள இனச்சுழற்சி மாற்ற நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    இதுவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவா்களும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் முன்னா் இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு சோ்க்கை நடைபெறும்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் அசல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றைக் கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் மூன்று நகல்கள் மற்றும் உரிய கட்டணம் கொண்டுவரவேண்டும். பெற்றோா் உடன் வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×