search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு கூடுதல் உபரிநீர் திறப்பு
    X

    அமராவதி அணையில் இருந்து வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 

    நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு கூடுதல் உபரிநீர் திறப்பு

    • மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.
    • 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டது. ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஜூலை 15-ந்தேதி அமராவதி அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது. அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை துவங்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் தலையாறு, மூணாறு, மறையூர், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதி மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்குப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது அணைக்கு நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் பிற ஓடைகளின் மூலம் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது . இதனால் கடந்த 7 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4.04 டிஎம்சி யில் 3.80 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1135 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

    பருவ மழை காலங்களில் அணையின் மொத்த நீர்மட்டத்தில் 85 அடியை எட்டியதும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிறு அன்று மாலை அணை நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்ததும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது .தற்போது அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக வாய்க்காலில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×