என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகளை படத்தில் காணலாம்.
உடுமலை ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
- போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.
- பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
உடுமலை:
தமிழ்நாடு முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் தீரன் சின்னமலை 218 ம் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர்- முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்பதற்காக காங்கேயம்,பொள்ளாச்சி, தாராபுரம்,ஒட்டன்சத்திரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பள்ளபாளையம் பகுதிக்கு சரக்கு வாகனத்தில் வருகை தந்தது.போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.இதில் 200 மீட்டர் பிரிவில் 284 வண்டிகளும் 300 மீட்டர் பிரிவில் 79 வண்டிகளும் கலந்து கொண்டது.
அதற்கு முன்பாக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த உரிமையாளர்கள் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது.இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றது.போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது.
சாரல் மழையிலும் அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன்படி 200 மீட்டரில் முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும்,2-ம் பரிசாக ¾ பவுன் தங்க நாணயமும் 3-ம் பரிசாக ½ பவுன் தங்க நாணயமும், நான்காம் பரிசாக ¼ பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 5 முதல் 25 இடங்களில் வந்த மாட்டு வண்டிகளுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டது.இதேபோன்று 300 மீட்டருக்கும் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
18 வினாடிகளுக்கும் குறைவாக வந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கினார்.இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக்அலி, உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போட்டி நடைபெறுவதை யொட்டி அமராவதிக்கு சென்ற வாகனங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.மேலும் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.






