உடுமலை பகுதி உணவகங்களில் தரமான உணவு வழங்க பொதுமக்கள் கோரிக்கை

காளானை சுட சுட சுவைப்பதற்கு சைவ பிரியர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள். ஒரு பாக்கெட் காளான் ரூ 45 முதல் ரூ 50 வரையிலும் கிடைக்கிறது
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

அறுஞ்சுவைகள் நிறைந்த உணவு கைக்கு அருகே இருந்தாலும் தூரத்தில் கிடைக்கும் மசாலாக்கள் கலந்த கம கம வாசனையுடன் கூடிய சிற்றுண்டிகளின் சுவைக்கு அடிமையாகாதோர் இல்லை என்றே சொல்லலாம்.

பல வகையான சிற்றுண்டிகள் இருந்தாலும் அவற்றில் முதலிடம் பிடிப்பது உடலுக்கு வலிமை தரும் காளான் சில்லி, பிரை, மஞ்சூரியன், தொக்கு என பல்வேறு வடிவங்களில் தயாராகி விற்பனைக்கு வரும் காளானை சுட சுட சுவைப்பதற்கு சைவ பிரியர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள்.

ஆனால் உடுமலை பகுதியில் உள்ள உணவகங்களில் தயராகும் காளான் ப்ரையில் காளானை தேடும் நிலைமை காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உடுமலை பகுதியில் உள்ள ஒரு சில சிற்றுண்டி, தள்ளுவண்டி உணவகங்கள் பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

குறிப்பாக காளான் ப்ரை என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் உணவில் காளான்களே இருப்பது இல்லை. ஆசை ஆசையாய் விலை கொடுத்து வாங்கி காளான் ப்ரை சாப்பிட அமர்ந்தால் ப்ரை முடியும் வரையில் காளானே கிடைப்பதில்லை. மாறாக மசாலா, மாவு நிறைந்த முட்டைக்கோசின் ஆதிக்கமே காளான் ப்ரையில் உள்ளது.

ஒரு பாக்கெட் காளான் ரூ 45 முதல் ரூ 50 வரையிலும் கிடைக்கிறது.அதை கொண்டு மாவுககள், மசாலாக்களை அதிகளவில் கலந்து சுமார் நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் அளவிற்கு ப்ரையை தயாரித்து விடுகின்றனர். இது முழுக்க முழுக்க பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும். விலைக்கு தகுந்த உணவை தரமாக கொடுப்பதற்கு மனது வருவதில்லை.

இதுகுறித்து உடுமலை பகுதியில் உள்ள உணவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் பொதுமக்கள் விரும்பிய உணவில் விரும்பிய பொருள் இல்லாமல் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். எனவே உணவுத்துறை அதிகாரிகள் உடுமலை பகுதியில் ஆய்வு செய்து உணவகங்களில் தயாராகும் உணவுகளின் தரத்தையும் அது தயாரிக்க பயன்படும் எண்ணெய்யையும் ஆய்வு செய்ய வேண்டும்.

அத்துடன் தயாரிக்கப்படும் உணவில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உணவை தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com