search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை   விவசாயிகள் கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை விவசாயிகள் கோரிக்கை

    • வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயார் செய்யப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    உடுமலை:

    தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு இரவு பகலாக உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணியில் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றியுள்ள பகுதிகளான கொழுமம், கணியூர், கடத்தூர், கொமரலிங்கம், வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயார் செய்யப்படுகிறது. அமராவதி புதிய,பழைய வாய்க்கால் பாசனப் பகுதி மற்றும் பிஏபி. பாசன பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். ஆனால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்த விவசாயிகளின் கரும்புகள் உரிய காலத்தில் ஆண்டு தோறும் வெட்டப்படாததால் பெரும் நஷ்டம் அடைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆலைக்கு கரும்பு பயிரிடுவதை குறைத்து வெல்லம் காய்ச்ச மட்டும் பயிரிட ஆரம்பித்தனர்‌.

    இதன் மூலம் கரும்பு 9 மாதம் முதல் 11 மாதத்துக்குள் வெட்டப்படுவதால் நல்ல சாறுடன் எடையும் கிடைப்பதால் தனியார் வெல்லம் தயாரிக்கும் இடங்களுக்கும், தாங்களாகவே சிறிய அளவில் வெல்லம் தயாரிக்க யூனிட் அமைத்தும் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தற்போது உடுமலையில் தயாராகும் வெல்லம் அருகில் உள்ள கேரள மாநிலத்துக்கும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைப்பதாக கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    வெல்லம் தயாரிப்பு குறித்து மடத்துக்குளம் விவசாயி ஒருவர் கூறுகையில், மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில்,வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பு சாகுபடி செய்துள்ளோம். இந்த கரும்பினை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்யத் தொடங்குவோம். இப்போது மழை குறைந்த பின்னர் கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு சுமார் 50 டன் கரும்பு கிடைக்கும். ஒரு டன் கரும்பு தற்போது ரூ.2300 வரை வாங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து ஒரு சிப்பம் 30 கிலோ எடையில், சுமார் 160 முதல் 200 சிப்பம் வெல்லம் தயாரிக்கலாம். அச்சு வெல்லத்தின் நிறத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் 950 ரூபாய் முதல் 1350 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் உள்ள கரும்பு எனில் ஒரு கொப்பரைக்கு 5 முதல் 7 சிப்பம் வரை வெல்லம் கிடைக்கும். தற்போது உரவிலை, போக்குவரத்து செலவு, அச்சு வெல்லம் தயாரிக்க கூலியாட்கள் சம்பளம், டீசல் விலை தற்போது பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில் வெல்லத்தின் தற்போதைய கொள்முதல் விலை நிலவரம் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. இதனால் பல விவசாயிகள் தனியார் கரும்பு வியாபாரிகளிடம் கரும்புகளை விற்று வருகின்றனர்.

    இங்கு தயாராகும் வெல்லம் கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில்தயாராகும் வெல்லத்தை விட இங்கு தயாராகும் வெல்லம் சுவை நன்றாக இருக்கும். இதனால் அனைவரும் இங்கு தயாராகும் வெல்லத்தை விரும்பி வாங்குகின்றனர். கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பொங்கல் பண்டிகைக்கு அரசே வெல்லத்தை அந்தந்த மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்வதற்கு முன்வர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×