search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா பருவ நெல் சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    சம்பா பருவ நெல் சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    • நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது
    • அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்தும், நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையிலிருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இதனால் அலங்கியம் முதல் கரூர் வரையிலான வலது கரை பழைய ஆயக்கட்டு பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அணை நீர் இருப்பை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் நிலைப்பயிர்களாக உள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகள் மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 12ந்தேதி முதல் 15 நாட்களுக்கு திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல் கரூர் வரை 10 கால்வாய்களில் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு ஆற்று மதகு வழியாக 1,503.36 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு 15 நாட்களுக்கு பிரதான கால்வாய் வழியாக 570.24 மில்லின் கனஅடி நீர் என மொத்தம் 2,073.60 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் அமராவதி அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. உயிர்த்தண்ணீர் திறக்கும் காலம் நிறைவு பெற்றதால் அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்தும், நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.

    அணை நீர் இருப்பை பொருத்து, மீண்டும் வலது கரை மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், பழைய ஆயக்கட்டு, ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு சம்பா பருவ நெல் சாகுபடிக்கும் நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பொழிவு மற்றும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×