search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாம்கோ கழகம் சார்பில்   திருப்பூர் மாவட்டத்தில்  கடன் வழங்கும் முகாம் - 25-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    டாம்கோ கழகம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் கடன் வழங்கும் முகாம் - 25-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

    • திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறுகடன் திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை - முதுகலை தொழிற்கல்வி - தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில் டாம்கோ திட்டங்களின் பயனை சிறுபான்மையின மக்கள் முழுமையாக அடைய கீழ்க்காணும் இடங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது.

    25-ந்தேதி திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி, 26-ந்தேதி தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, 27-ந்தேதி உடுமலை நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 5மணி வரை நடைபெறும்.

    இம்முகாமில் புதியதொழில் மேற்கொள்ளவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் சிறுபான்மையினருக்கு கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000 நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார்கார்டு, செல்லத்தக்க வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்டதொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com - ஐ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×