என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை, பலத்த காற்றில் இருந்து  பயிர்களை காக்கும் வழிமுறைகள்
    X

    கோப்புபடம். 

    பருவமழை, பலத்த காற்றில் இருந்து பயிர்களை காக்கும் வழிமுறைகள்

    • பசுமைக்குடிலின் கட்டுமானத்துக்குள் கிளிப்புகள் ஏதேனும் இருந்தால் அதை மாற்ற வேண்டும்.
    • வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காக்க பசுமைக்குடிலின்அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.பசுமைக்குடிலின் கதவுகள், ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாதவாறு பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை அகற்ற வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்துக்குள் கிளிப்புகள் ஏதேனும் இருந்தால் அதை மாற்ற வேண்டும்.

    நிழல் வலைக்குடிலில் கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல் வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புகம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்வதுடன், மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை அனைத்து தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.

    தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய்தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றில் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களின் பாதிப்பு இருந்தால் உடனடியாக வேர்பகுதியை சுற்றிமண் அனைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி, மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்.

    வாழை காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அனைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் மர கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றி சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்ததார்களை அறுவடை செய்ய வேண்டும்.

    தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய்,தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரியகாலத்தில் பயிர்காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால்முட்டுக்கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×